ஞாயிறு, 24 மார்ச், 2019

முக நாண்


முக நாண்

கொண்டு வந்து கொண்டு வந்து
கசக்கிறாங்கள் பெண்ணை
இது உண்மை இது உண்மை....
கோவைப்பழம் நீயென்று
மயக்கிறாங்கள் பெண்ணை உன்னை

செல்போனின் மயக்கத்தில்
புரிவதில்லை உண்மை பெண்ணே..நீ
உன் போனில் உலகத்தை மறப்பதேனோ பெண்ணே
இது உண்மைஅதன் தன்மை


கண்கவர கவர்ச்சியாக உதிர்ப்பானே வார்த்தை..நீ
வகிடெடுக்க புரியாமல் முழுங்குவதே மடமை
பெண் கவர பார்ப்பதே முகநூலில் தன்மை..புரிந்தும்
தெரியா நட்பை தேடி ஓடுவதே வீண்மை.

காதல் ஒன்றும் கவர்சியாலே உதிப்பதில்லை மகிமை..இந்த
காமுகர்கள் நட்பை இனம் காட்டுவதே இல்லை அவர்
காத தூரம் போனாலும் காத்திருப்பார் உன்னை
இந்த கயவர்கள் மூடி முகம் மறைப்பதுவே உண்மை

வாலிபத்தில் நின் வாலைப் பருவத்தை சிதைக்கவே வேணும்
அந்த கட்டாரி கூட்டத்தை நீ புரியவேண்டும் பெண்ணே.
கல்வி கற்கும் காலத்தில் கலவிக்காக அலையும் ..இந்த
கருவி கொண்டு உனை அணைக்கும் நித்தம் பல பெயரில்

துகிலுரியப் பார்த்திருப்பான் ஒரு கால வேளை.அவன்
துணிவெல்லாம் நின் மெளனப் பார்வை...
துணியின்றி துணிவாக கேட்டிருப்பான் ஒரு பாட்டில்..நீ
துணையின்றி துடிப்பாக கொடுத்திருப்பாய் ஒரு துணிவில்...

இங்கேதான் மாட்டுப்பட்டாய் எதிர் கால பணிவில்..நீ
இனி என்ன ஆவதென்று அவலப்படுவாய் வாழ்வில்..
மானமெல்லாம் போனதெல்லாம் உன் மதியற்ற மாண்பால்..இனி
மண்டியிட்டு.மாண்டு போய் மரணிப்பதுவா நியதி.

நித்தம் அதை கொடுத்தாய் நிலை தடுமாறி போனாய்
நெற்றேத்தி போவதாய் உன்னை விலை கேட்பான்
ஆறறிவு சோலையினால் அறிந்து கொண்டு விலகு..இந்த
ஆரணியில் சோரம் போனோர் ஓரணியில் நீயும்

உருவிக் கொண்டு போகவேண்டும் உனதான நட்பை
எந்த அருவியாக வந்தாலும் அழைக்காதே அவனை
சித்தம் ஓங்கி காதலிப்பவன் உன் சிரிப்பொலியே கேட்பான்
பித்தம் தலைக்கேறுபவனே பிறந்த மேனி படங்கள் கேட்பான்

சொல்லாமல் உனை உணர்ந்து மேலேறிச் செல்லு...நல்ல
வல்ல பல வழிகள் உண்டு வாஞ்சையுடன் உணர்வாய்
கல்வி தானே நல்கும் ஒரு கட்டழகு வாழ்வு .இந்த
கருமாதி மாயைகளை புறந் தள்ளி நீ வாழு.. 

அவனில்லா அவனியிது ஆபத்துக்கள் அதிகம்.
அறிந்து நீ வாழ்வெழுது அவனது ஆழ் அரவணைப்பில்
எடுத்துரைத்துப் போய் விட்டான் எழலாக உலகில்
அந்த அலகில் நீ வனப்பெழுது ஆனந்தமாய் அகிலில்.




வியாழன், 21 மார்ச், 2019

சமூகத்தை காதல் செய் 15,03,2019



சமூகத்தை காதல் செய் 15,03,2019

இந்த பிரபஞ்சத்தில் உயிரினங்கள் தோன்றி இற்றைக்கு மில்லியன் ஆண்டுகள் புரண்டு ஓடின.இந்த வாழ்வோட்டத்தில் பல பரிமாணங்கள் புதிய பரிணாமங்கள் பெற்று பண்பாடு உருவாகியது அதை ஒரு வகையில் மனித நாகரீகம் என்றும் பண்பென்றும் வகுத்து உலக வாழ் மனித உயிரினங்கள் கூர்ப்படைந்து கொண்டன.

விலங்குகளும்.பறவைகளும் மேலும் ஊர்வனவும் எல்லாமே ஒரு சமூக கூட்டங்களாகவே வாழ்வெழுதிக்கொண்டன.இப்படியே இன்றும் வாழ்கின்றன.இவைகள் சொல்லாமல் கற்றுத் தரும் பாடமே சமூகத்துடன் ஒன்றித்து வாழ்தல் என்றால் மிகையாகாது.எந்த ஒரு உயிரினமும் தனித்து வாழ்தல் என்பது சாத்தியமற்ற ஒன்றே.

மற்ற உயிரினங்களை விட்டு நான் இப்போது தொட்டழுதிச் செல்ல விழைவது மனித சமூகத்தின் வாழ்வியலில் சமூகத்தின் மாண்பான பண்புபற்றியே ஆகும்.அது சமூகம் சார்ந்த ஒத்துழைப்பாலும்.பொது அமைப்பு சார்ந்த செயற்பாடுகளாலும் மட்டுமே உயிர்பெழுதும் தன்மை கொண்டவைகளாக மிளிரும்.

குடும்ப உறுப்பினர் ஒருவர் தன் சகோதரனையோ அன்றி சகோதரியையோ மேலும் பெற்றோர்கள்.உற்றார் உறவினர்களையோ என்றுமே சார்ந்துதான் தன் வாழ்வின் ஆரம்பங்களை சுவையூட்டிக் கொண்டு வளர்கின்றார்.அஃதன்றேல் அவர் தம் வாழ்வில் அரும்புப் பருவமே அழிவடைந்து விடும்.இப்படி நாளாந்த வாழ்வில் குடும்ப அங்கத்தவர்களினதும்.சமூகத்தினதும் அரவணைப்பில் வளரும் குழந்தையானது திடகாத்திரமாகவும்.தன்நம்பிக்கை சார்ந்த்தாகவும் வளரும்.அக்குழந்தைக்கு அவர் வளரும் போதே சமூக விழுமியங்களான பண்பாடும்.வாழ்வியல் சீரும் ஊட்டப்படும்.இப்படி வளரும் குழந்தைகள் அவர் தம் பிற்கால வாழ்வில் தடம் புரள்வதும் சமூக காதல் அற்ற ஒரு நிலைப்பாடே ஆகும்.

இதற்கு சான்றாக இருப்பது முதலில் பெற்றோரும்,பிற்பாடு சமூகமும்,அவர் தம் நட்புக்ளும் ஆகும் என்றால் மிகையாகாது.முதலில் பெற்றோர்களை பார்ப்போம்.இன்றைய கால கட்டத்தில் ஒரு பிள்ளையின் எதிர்காலம் எப்படியும் இது அன்று தொட்டே சகல குடும்பங்களிலும் நிலவும் ஒரு அர்த்தமற்று நிலைப்பாடு ஆகும்.அதாவது தன் பிள்ளை ஒரு மருத்துவராக .பொறியியலாளராக மட்டுமே அல்லது ஒரு ஆசிரியராக வரவேண்டும் என ஆழமாக எதிர்பரப்பதாகும்,


இங்கு எந்த பெற்றோருமே தன் பிள்ளையின் ஆளுமையை.அவர் தம் விருப்பத்தை பார்ப்பதும் இல்லை.ஆயின் அங்கீகரிப்பதும் இல்லை.இது முதல் தவறு.பெருந் தவறு.நன்றாக யோசித்துப் பாருங்கள் இந்த உலகம் ஒரு மருத்துவராலும்.ஒரு பொறியியலாளராலும் அல்லது ஒரு ஆசிரியனாலும் மட்டுமா இயங்குவது.அன்றி இப்படியானொரு நிலைப்பாட்டில் தன் பிள்ளைகள் இருந்தால் மட்டுமே வாழ்வு சீர் பெறும் என நினைப்பது அபத்தமே அன்றி வேறில்லை.

இப்போது நாம் 21ம் நூற்றாண்டில் மிக பெரிய தொழில் நுட்ப கணணி உலகில் காலூன்றி இற்றைக்கு சுமார் 25வருட மாகின்றது.அதாவது இந்த தொழில் நுட்பத்தை நாம் உபயோகிப்பதில் இருந்து புரிந்து கொள்ளணும்.அதாவது கடந்த கால சந்ததியின் பெற்றோர்களின் களிவிரக்கம் முடிந்து புதிய சந்ததிகளின் பெற்றோர்களாலேயே தற்போது உலகம் இயங்குகின்றது.நான் இங்கு உலகம் என் குறியிட்டது நிச்சயமாக எமது சமூகத்தை மட்டுமே என கருத்தில் கொள்க!

ஆனால் இவர்களும் பழைய குருடி கதவை திறவடி எனும் நிலைப்பாட்டில் தங்கள் குழந்தைகளிற்கு அதையே ஊட்டி வளர்ப்பதில் இருந்த மாற்றுச் சிந்தனைகளை உருவாக்க வேண்டும்,இந்த கட்டுரையின் நோக்கமே அதுதான்.ஆயினும் இந்த மாற்றங்கள் சற்று சீரடைந்து இருப்பது போல உள்ளது.இன்றைய கால கட்டத்தில் அது பெரியோர் முதல் சிறு குழந்தை வரை இந்த தொழில் நுட்பம் ஒரு விளையாட்டு களமாக.முகநூல் தளமாக விரிவடைந்து நிற்கின்றது.ஆனால் இந்த தொழில் நுட்பத்தில் சமூக வலைத்தளத்தையே இங்கு நான்முன்னுதாரணமாக கொண்டு தொடரவிழைகின்றேன் இதுவே காலப் பொருத்தாமனதாகும்.

பிள்ளைகளின் படிப்பில் ஆர்வம் காட்டும் பெற்றோர்கள் அவர்தம் கையில் உள்ள சிமாட் தொலைபேசியின் அவர் தம் உபயோகிப்புக்களை கருத்தில் கொண்டு அதை அவதானிப்பதில் அவ்வளவு ஈர்வம் காட்டுவதாக தெரியவில்லை.இங்குதான் சமூகப் பிறழ்வுகளின் ஆரம்பமே.

இன்றைய உலகில் பிள்ளைகளின் கையில் இந்த தொலைத்தொடர்பு சாதனம் தேவையா என கேட்டால் ஆம் என்றே சிலபெற்றோர்கள் கருதுகிறார்கள்,அதற்கு பல காரணங்களையும் வகுத்துக் கொள்கிறார்கள்.இதுவே ஒரு வயது வந்தவரிடம் இருக்கும் போதும் அதே காரணம்.நிச்சயமாக இந்த சாதனம் தேவைதான் ஆனால் அதை எதற்கு உபயோகிக்கிறோம் என்பதில் ஆரம்பிக்கிறது சமூக அக்கறையின்மை.

முகநூலில் முகம் தெரியா நட்பை பேணுதல்,அவர்கட்கு போட்டோ அனுப்புதல் அவரிடம் இருந்து வரும் ஆபாச காட்சிகளில் ஈடுபாடு கொள்ளல்.பின் அந்தரங்க போட்டோக்களை பரிமாறுதல் என ஒரு வரையறையின்றி தற்போது உள்ள இளஞ் சந்ததிகள் ஒரு விளையாட்டாக ஆரம்பித்து பின் பெரும் வினைகளில் அகப்பட்டுக் கொள்கிறார்கள்,

சமீபத்திய உதாரணமாக இந்தியாவில் பொள்ளாச்சி கிராமத்தில் அரங்கேறிய அசிங்கத்தை கோடிட்டு காட்டலாம். இலங்கையில் சகல இடங்களிலும் இப்படியான நிலைப்பாடுகள் உலவுகின்றது.எனவே இளைய சந்திகள் இப்படியான தனக்கு தேவையற்ற.மேலும் பொறுப்பற்ற செயலை விட்டு பொதுக் கட்டுமான செயற்பாட்டிற்குள் தங்களை இணைத்துக் கொள்ளவேண்டும்.ஒரு சமூக வலைத்தளத்தின் நோக்கம் என்பது கடல்போல விரிவடைந்துள்ளது.ஆனால் சிலரின் அப்பட்டமான சமூக பிறழ் நிலைக்குள் ஊடுருவுவதால் ஏற்படும் அபத்தத்தை என்ன வென்று எடுத்துரைக்க.ஆயினும் காலத் தேவை கருதி சிறு குறிப்பாக ......

பட்டினத்தார் சொன்னதுபோல பிறந்த இடத்தையே நாடுதடா பேதை மனம் பால் கறந்த இடத்தையே நாடுதடா பாவியோடை கண்கள் என்பதாக பலரின் சித்து விளையாட்டுக்களால் சமூகத்தின் இளைய தலைமுறைகள் வழி தடுமாறி செல்கின்றார்கள்.முதலில் ஒன்றை காத்திரமாக உணரணும்.இல்லறம் என்றால் என்ன?தாம்பத்திய உறவென்றால் என்ன வென்ற விழிப்புணர்வுகளை பெற்றோர் முதல் ஆசிரியர்கள் நட்பு வட்டாரங்களில் தெளிவு பிறக்க வைக்கணும்.இதை திறந்த மனத்தோடு விளக்கம் சொன்னால் அல்லது அறிந்து கொண்டால் இப்படியாக சமூக வலைத்தளங்களில் ஆபாசம் நெருடிப்போக வழி இல்லாமல் போகும் என்பதல்ல ஆயினும் மன ஒழுக்கம் என்பதை ஊட்டலாம்.....

எனவே செக்ஸ் எனபது தவறான போக்கும் அல்ல இது இல்லையேல் மக்கள் பெருக்கமோ அன்றி சமுதாயமோ உருவாக வழியே இல்லை.ஆனால் அதை யார் எங்கே எப்போது கடைப்பிடிக்கணும் எனும் தெளிவு தேவை.நாங்கள் இதை எப்போதுமே ஒரு தவறானதாக ஒழித்து வைத்து உரையாடுதல் கூட இப்படியான தவறிற்கு காரணமாகின்றது.என் வரையில் பாலியல் பற்றிய விளக்கங்களை தெளிவுகளையும் பாடசாலையில் இருந்து ஆரம்பக் கல்வியில் புகுத்தினால் இந்த இழி நிலை தோன்றாது.

மற்றது குடும்ப உறவுகளின் தாற்பாரியத்தை சரியான திசையில் விளங்கக் கூடியதாக இளைய தலைமுறைக்கு கற்றுக் கொடுத்தலும் அவசியமே.தாய்.தங்கை.தமக்கை .அண்ணன்.தம்பி அந்த உறவு முறைகளின் வீச்சும் அவர்தம் குடும்ப வாழ்வு முறையும்.மைத்துனி மச்சான்.மாமி.அத்தை இந்த உறவுகளின் வீரியத்தையும் அதனால் ஆகும் சமுதாய விழுமியங்களையும் சரியான திசையில் உணர்த்தணும்.இங்கே வெளிப்படையாக திறந்த மனதுடன் இருத்தல் அவசியம்.ஒரு தவறை ஒருத்தன் செய்தால் அதன் தார்மீக நிலைப்பாட்டை கருத்தில் எடுத்து நல் வழி காட்டினால் அவன் திருந்தி வாழும் வகை தென்படும்.அதை விட்டு கேலிப் பேச்சுக்களாலும்.கிண்டலாலும் அதை மிகைப்படுத்தினால் அவன் செய்த தப்பும் வேறொரு பரிணாமமாக வெளிப்படும்.
சமுதாய உறுப்பினர்களும் தங்களது தாம்பத்திய உறவை ஒரு கட்டுக்குள் வைத்திருத்தல் அவசியமாகும்.

என் பொண்டாட்டிதானே.என் மச்சாள்தானே என விடும் கால.நேர.இடங்கள் அற்ற தொடுகைக்கள் கூட இப்படியான திசைமாற்றத்திற்குள் ஒருவனையோ அன்றி ஒருத்தியையோ திடம்.தடம் மாற வைத்துவிடும் என்பதை சுற்றமும் அறிந்து அதன்படி ஒழுகுதல் வேண்டும்.

விலங்கினங்கள் கூட கலவி என்பதை ஒரு குறிப்பிட்ட காலத்திலேயே முடித்துக் கொள்ளும்.அவைகளை ஐந்தறிவு பிராணிகள் என நையாண்டி செய்யும் மனித இனமோ கலவிக்கு எவ்வித கால.நேரங்களை வகுப்பதில்லை.எப்போதடா சந்தர்ப்பம் வரும் என காத்துக் கொண்டிருக்கும் சில காளையர்கள் எனும் காவாலிகள் புனை பெயரில் இந்த சமூக வலைத்தளத்தில் ஊடுருவி பெண் வேட்டைகள் நாடாத்துகின்றார்கள்.இதன் தாற்பாரியத்தை உணர்ந்து கொள்ளும் நிலையில் சில பருவ மகளிரோ அன்றி பருவ மகன்களோ இல்லை என்பதே யதார்த்தம்.அப்படியான சிலருக்கு அறிவுரை சொன்னாலும் ஏற்கும் அல்லது ஒத்துக் கொள்ளும் பக்குவத்தை இந்த காளைப்பருவங்கள் ஏற்பதில்லை என்பது துரதிருஸடமான நிலைப்பாடாகும்.

நிற்க!.
அன்றைய வாழ்நாட்களை நமது முற் சந்ததியினர் எப்படி கழித்தார்கள்?எப்படியான சமூக பழக்கங்களை அல்லது கலாச்சாரங்களை பின்பற்றினார்கள் என்பதில் எவர்க்கும் ஈடுபாடு இல்லை எனபதுவும் காலச் சுழற்சியின் மாறுதலே.அத்துடன் அன்றைய நாட்களில் அவர்களின்... ஏன் இதை பிரதிபண்ணும் எங்களின் பொழுதுபோக்குகள் பின்வரும் இப்படியான விளையாட்டுக்களில் கழிந்தன.இப்படியான விளையாட்டுக்ளால் நாம் எமது உறவுகளின் சமுதாயத்தின் விழிமியங்களை பேணிய கையோடு நற்பெயர்களையும் சமுதாயத்தின் ஊடாக பெற்றுக் கொண்டோம்.இதனால் உடலும் மனமும் பெரும் வைராக்கியம் பெற்றுக் கொண்டன.மனச் சஞ்சலம் இல்லாத தற்போதைய காலித்தனமான எண்ணங்கள் ஊடுருவாத ஒருவிதமன இயல்பான பாதைகள் இருந்தன.

தற்போதைய இளைய சந்ததிகளில் எத்தனை பேர்க்கு பின் வரும் விளையாட்டுக்கள் தெரியும் அதன் மூல்ம் ஏற்படும் தேகப் பயிற்சிகளின் விழைவுகள்..மனித வள ஒற்றுமைகள் விரியும்என.... ஏன் பெற்றோர்களிற்கு தெரியுமா?

கடந்த கால விளையாட்டுக்கள்.கிளித்தட்டு.கள்வன்.பொலிஸ்.அம்புக்குறி.கிட்டிப் பொல்லு.ரவுண்டேசு....சிறுபிள்ளைகள்கூட கல்லுச்சுண்டுதல்.தாயக் கட்டை .கொக்கு பிடித்தல் மங்காத்தா அதாவது எட்டுப் பெட்டி.கிந்திக் கிடித்தல்.என நாளாந்தம் தமதான பொழுதுபோக்குடன் உடல்.மன வளர்ச்சிகளை பெற்றுக் கொண்டார்கள்.

இப்போதைய சந்ததிகளின் வாழ்வு எவ்வளவோ சுருங்கி ஒரு கைவிரல் சுட்டியில் அடக்கப்பட்டுள்ளது.யார் யாருடனாவது முகம் கொடுத்து இயல்பாக.மகிழ்வாக பேசிக் கொள்கிறார்களா?தங்களின் நாளாந்த இன்ப.துன்ப.நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கிறார்களா?இல்லையே...சற்றே விநோதமான வாழ்வை இந்த சிமாட் தொலைபேசி மக்களிற்கு அருங்கொடையாக பெருங்கொடையாக அளித்துள்ளதாக இந்த இப்போதைய சமுதாயம் அலட்டிக் கொள்வதே இங்கு விந்தையாகும்..இந்த சுருங்கிய உலகத்தால் நாம் பெற்றுக் கொள்ள வேண்டிய எத்தனையோ தரமான உறவுகளை நாளாந்தம் இழந்துள்ளோம் என்பதை பட்டியல் போட்டல் இந்த கட்டுரைக்கு பக்கம் நீட்சியாகிவிடும்.

ஆக வேண்டாம் வலைப்பந்து விளையாட்டு??.விளம்பரத்திற்கு ஒருக்கால் துடுப்பாட்டம் அவ்வளவே.சரி மக்களாவது நாளாந்தம் தங்களின் மத்தியில் ஒரு சந்திப்பை நடாத்துகிறார்களா என்றால் அது துப்பரவாக இல்லை என கூற முடியாவிட்டாலும் முழுமையானதாக கூறமுடியாது.இப்படி சந்திக்கும் இளையார்களோ அன்றி பெரியவர்களோ அதற்கான நேரத்தை ஒழுங்கமைப்பதே இல்லை.இது என் ஊரக உலாவலின்போது கண்ட மிகப் பெரிய அவலம் என்றால் மிகையாகாது.சந்திப்பவர்கள் கூட நேரமில்லை எனும் ஒரு பொய்ச் சாட்டுடன்.விலகிச் செல்வதே ஆங்கு மிளிரும் நடைமுறையாகும்.
எனவே இப்படியான விளையாட்டுக்ளை மக்களின் முன் பரப்பி அவர்களையும் இதில் ஈடுபடச் செய்ய எமது சனசமூக நிலையம் ஆவன செய்ய வேண்டும்.இப்படியான பொதுக் கட்டுமானத்திற்குள் இளையோர்களை ஈர்த்தெடுத்தால் தேவையற்ற களியாட்டத்தில் மக்களின் ஈடுபாட்டை இல்லாதொழிக்கலாம்.இதற்கு எத்தனை பெற்றோர்கள்,பிள்ளைகள் பங்களிப்பார்கள் என்பதை சனசமூக நிலைய பொறுப்பாளர்களின் செயற்பாட்டில் உள்ளது.
ஆசினும் இது கைகூடுமா என்பதே தொக்கி நிற்கும் மிகப் பெரிய????ஆகும்

ஆக சமூகத்தை காதல் செய்ய தற்போதைய இளையோர்களை ஒரு கட்டுமனாத்திற்குள் இணைக்க வேண்டியது காலத் தேவையாகும்.
ஊர் பிரிந்து ஒற்றுமை கலைந்து வேடிக்கையாக உள்ள எமது ஊர் இனியாவது ஒற்றுமையாக ஓர் குடையின் கீழ் இயங்க சமூகத்தை காதல் செய்யுமா?இது ஒண்ணும் பெரிய பிரச்சனை இல்லை என்றில்லை இதுவே எதமு பெரும் பிரச்சனை ஆகும்

ஒற்றுமையாக இயங்க பல விட்டுக் கொடுப்புக்ளும்.புரிந்துணர்வுகளும்.ஈகோ அறவே அற்ற மனத் தெளிவும் தேவை என்பதை ஆழமாக கருத்தில் கொண்டால் இந்த சமூகத்தை உண்மையிலையே காதலித்தால் .......
நன்றி ஊரகனாக
ஊரகன்
சு,குமார்

சமூகமும்.சமூகநாடியும். 16.03.2019


சமூகமும்.சமூகநாடியும். 16.03.2019

எமது ஊரகம் ஒரு சனசமூக நிலையத்தை பல வருடங்களாக நாடோடித்தனமாக நிலையில்லா இடங்களில் அலைந்து காலப் போக்கில் ஊரவர்களின் அதி சிரத்தை காரணமாக ஒரு நிலையான இடத்தில் நிமிர்வெழுதிக் கொண்டது.

எத்தனை ஆரவாரமான திறப்பு விழா?ஊர்மக்கள் அன்றுதான் இவ்வளவு பேர் கலந்து கொண்டதாக ஊரகம் மகிழ்ச்சி பேரலையில் திண்டாடியது.ஆச்சு அதற்கான முடிந்த வரையான கட்டுமானப் பணிகளால் எல்லாமே சிறப்பாச்சு.

காலம் மீண்டும் சில தேவைகளை கருத்தில் எடுக்கும்.அதன் உத்தம தேவை கருதி நிலம் நல்கி கட்டுமானப் பணிக்கு தன் சேவைகளால் உரம் கொடுத்தான் ஒருவன்.ஆம் அது எமது ஊரகத்திற்கான அரும்புகள் முன்பள்ளி எனும் பெயருடன் ஆரவாரமாக ஆரம்பமாச்சு.அங்கே சனசமூக நிலையதிறப்பு விழாவின்போது எம்மால் முன்னெடுக்கப்பட்ட ஒரு அதி தேவையாக சமூக நாடி எனும் எமதூரக மக்களின் கைவண்ணத்தில் அவர் தம் ஆர்வத்தில் அவர்களின் அபிலாசைகளையும்.எதிர் பார்ப்புக்ளையும்.உள் கிடக்கைகளையும் வெளிக் கொண்டுவர இந்த சமூக நாடி புத்தகத்தை ஒரு தொட ர்பூடகமாக எதிர் பார்த்தோம்.

இந்த இரண்டு கட்டுமானங்களின் ஆண்டு விழாவை நாம் என்றுமே சித்திரை 16ல் கொண்டாடுவதாக ஒரு தீர்மானம் அதுவே நடைமுறையாக.இந்த கணத்தில் ஊரவர்களின் திறன்களை அதாவது.கலை மேல் உள்ள ஆர்வத்தையும்.அவர் தம் குரல் வளங்களையும்.நடனங்களின் நர்த்தனங்களின் அலைமோதிப்பையும் எல்லாமே எமது முன்பள்ளியில் அரங்கத்தில் அரங்கேற்ற முடிந்த வரை ஆவன செய்துள்ளோம்.ஆனால் ஆங்கு இப்படியான நிகழ்ச்சிகளை ஆர்வமாக மேடையேற்ற எமதூரக மக்கள் பின் நிற்பதுவும்.ஆர்வங்களகற்றி புற முதுகு காட்டுவதும் ஏன் என்பதே புரியாத புதிராக.....

அதைப் போல வருடா வருடம் வெளியிட தீர்மானித்த சமூகநாடி எனும் புத்தகத்திற்கு ஆக்கங்களையோ அன்றி ஓவியங்களையோ அன்றி தன்னாலான கவிதை கட்டுரைகள் என பன் முகம் தாங்கி எந்த ஒரு படைப்பையும் வேளைக்கே சனசமூக நிலைய பொறுப்பாளர்களிடம் கொடுத்து தங்களின் தார்மூக பொறுப்புணர்வை மக்கள் வெளியிடத் தயங்குவதன் காரணங்கள் இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது.

ஊ ர்மக்களின் தாகங்களை அதாவது இளையோர் முதற் கொண்டு முதியோர் வரை சகலரிடமிருந்தும் நாம் எதிர்பார்க்கும் இத்தகைய ஆக்ஙகளின் செயற்பாடுகள் வெகுவாக பின்னடைந்திருப்தை எமது ஊரக மக்கள் தங்களின் கருத்தில் எடுப்பார்களா? வருடா வருடம் இந்த மக்களின் ஆக்கு திறனை வெளிப்படுத்த திரு வாசன் அவர்கள் செலுத்தும் பணமோ அன்றி இந்த ஆக்கத்திற்காக திரு சங்கர்.மற்றும் தலைவர் அவர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வீணாவவதை எந்த முகம் கொண்டு பதிவேற்றுவது?

வருடா வரும் தீபாவளி.வருட புத்தாண்டு.ஆலய திருவிழா இதற்கொலாம் முன்னேற்பாடாக ஆயத்தம் செய்யும் மக்கள் இதுவும் ஆண்டு தோறும் இத்தனையாம் திகதி நடைபெறும் எனும் யதார்த்தத்தை மனக் கொள்ளாமல் இருப்பது ஏன்?

இந்த இரு கட்டுமானங்களிற்கும் ஊரக மக்களும்.புலவாழ் மக்களும் உவந்தளித்த நிதியின் ஆக்கு திறன்களை மழுங்கடித்தல் எத்தகைய முரண் என்பதை ஊரவர்கள் உணருவார்களா?.எத்தனை இழுபறிகள். இடைஞ்சல்கள்.தடங்கல்கள் யாபேற்றிற்கும் முகம் கொடுத்து தளராமல் கருவாக்கி உருவாக்கி தளம் கண்ட எம் இரு கட்டுமானங்களின் களங்களை பலப்படுத்த இந்த தும்பளை மேற்கு வாழ் மக்கள் தாமாகவே முன் வரவேண்டும் அஃதன்றேல் கால சுழற்சியில் எமது இந்த சமூக விழிமியங்களை தாங்கி செல்லும் ஊரக தேரான சனசமூக நிலையமும்.அரும்புகள் முன்பள்ளியும் தட ம் புரண்டு அதன் நோக்கம் அறவே அற்று மீண்டும் பழைய நிரைக்கே ஆதரிப்போர் அற்று போய்விட நாம் எங்ஙனம் அனுமதிக்க முடியும்?

கற்றோரும்.க ல்வியில் கரை கண்டோரும்.ஓவியத்தில்.நாட்டியத்தில்.பாட்டில் இசை அமைப்பில் .சோதிடத்தில் .ஆலய நிர்வாகத்தில் என சகல பாதைகளிலும் கரை புரளாமல் நிமிர் வெழுதிக் கொண்டோரை தாங்கி நிற்கும் திமிர் கொண்டது எங்களது ஊர் எனும் பெருமிதம் மட்டும் போதுமா?

தாம் கற்றதை மற்றோர்க்கும் புகுத்தி .தான் அறிந்த நல்ல.தீய நடப்புக்களை தம் மக்களிற்கு அறிவால் ஊட்டி ஆழ விதை கொண்ட எமது ஊரிலா இன்று எழுத்திற்கும்.கலை நிகழ்விற்கும் பஞ்சம்.வெட்கம்.வெட்கம்.இதை எழுதும் எனக்கே வெட்கமாக உள்ளது.ஆயின் புலம் பெயராமல் புலன்களோடு ஊரில் ஒன்றித்து வாழும் எம் மக்களிற்கு எங்கே போனது இந்த தார்மீக புத்தி.இதை செயலால் காட்டி எமது ஊரக சனசமூகநிலையத்தை வெற்றிகரமாக நகர்த்தி செல்லும் தார்மீக பொறுப்பை யார் பறித்தார்??

ஊனக கண்களை உயரே துக்கி எறிந்து விட்டு உங்கள் மானக கண்களை அகல திறந்து உங்களின் செயற்கரிய பங்களிப்பிற்காக காத்துக் கிடக்கும் எங்கள் ஊரக இரு கட்டுமானங்களையும் உங்களின் கைலாகு கொடுத்து அதை தூக்கி சிறப்பாக ஊரக வலம் வர ஒத்தாசை கேட்டு உங்களின் கலம் வருகின்றோம்.ஆவன செய்வீர்கள் எனும் அசையா நம்பிக்கைகளுடன்.

வெறும் கெளரவத்திற்காகவும்.அந்தஸ்த்திற்காவும் இங்கே கட்டுமானங்கள் உயர எழுப்படவில்லை.அந்த ஊரில் இருக்கு இந்த ஊரில் இருக்கு எனும் பேதமையால் இவை உருவாக்கப்படவில்லை.அதி தேவையின் மூலங்களை கருத்திற் கொண்டு உங்களின் பங்களிப்புக்களுடன் ஆனந்தமாக.அபிலாசைகளின் உறுதுணைகள் மோலோங்க ஆர்வமாக கட்டப்பட்தே இந்த கட்டுமானங்கள்.மட்டுமல்ல இதன் மூலம் நாம் மேலை சொன்ன சகல தேவைகளையும் பூர்த்தி செய்து வரும் எம் இளைய சந்திதிகளிற்கு ஒரு முன்னுதாரணமாக செயல்பட்டு அடுத்த தலைமுறையின் கைகளில் ஆரோக்கியாமாக கையளிக்க வேண்டி, எங்களின் உங்களின் காலக் கடன்களை உங்கள் அகத்தே சிரத்தையாக பதிவெழுதி ஆக்க பூர்வமாக செயல்பட அனைவரையும் திரண்டு ஒத்துழைத்து இந்த ஆரோக்கிய தேரை அடுத்த கட்டத்திற்கு முன் நகர்த்திக் கொள்ள எமது உள்ளக ஊரக மக்களே அணிதிரண்டு செயற்பட வாருங்கள்.
இந்த அருமையான கால கட்டத்தை நழுவ விடாமல் தொடர்ந்தும் முழு மூச்சுடன் இயங்கி எம் கெளரவத்தையும் .உமது ஊரகத்தின் சாலச் சிறப்பான பண்பையும் காப்போம் எனும் உறுதியுடன் உவந்து முகம் தெளிந்து வாருங்கள்,உம் உழைப்பில் இந்த கட்டுமானங்களின் முழுத் திறனையும் வெளிப்படுத்தி முக.மலர்ச்சி கொள்வோமாக.அந்த ஒளியில் எமது வாழ்வு புத்தொளி வீசி பிரகாசிக்கட்டும்.
வருங்கால இளைய சந்ததிகளின் வரப்பிரசாதம் இதுவென சங்கே முழங்கு.
நன்றி ஊரகனாக
சு.குமார்


மகிழ்ச்சி


                                                                        மகிழ்ச்சி

விடியும் காலை பொழுதில் கேட்கும்
சேவல் குரலில் மகிழ்ச்சி
புள்ளினங்கள் பூவில் தேனை
அருந்தும் போது மகிழ்ச்சி
கிழக்கு வானில் கதிரவன் வீசும்
கதிரில் குளிர்ச்சி.இந்த
குதூகலங்கள் என் மனதில்
ஏற்றுகின்றதே மகிழ்ச்சி


அம்மா என்று ஆவினங்கள்
அழைப்பதில் ஒரு பாவம்
அந்த பாவனையில் கன்று துள்ளி
ஓடும் போது தாளம்
மடியில் முட்டி பாலை
குடிப்தில் உண்டு மகிழ்ச்சி
அந்த காட்சி என்னில் ஏற்றுகின்றதே கிளர்ச்சி.

காலை எழுந்து வாசல் தெளித்து
போடும் கோலம் அழகு
அதில் பூக்கள் வைத்து வர்ணம் இட்டால்
ஏற்படுமே மகிழ்ச்சி.

பாடாசாலை நோக்கி பாலகர்கள் போவது ஒரு அழகு
அந்த அழகை நோக்கும் என் மனதில்
பொங்கி வரும் மகிழ்ச்சி..
சுற்றாடலை அழகு பேணி வைத்திருத்தல் மகிழ்ச்சி
அதை எல்லோருமே சேர்ந்து செய்தால் பூபாளமே மகிழ்ச்சி

வீணாக நேரம் போக்கி வாழ்வதல்ல வாழ்வு.நம்
பெற்றோருக்கும் உதவி செய்து வாழ்வதுவே மகிழ்ச்சி
சுற்றத்தோடும் உறவுகளோடும் உண்மை பேசி
வாழ்வதுவே வாழ்க்கை அந்த வாழ்வினிலே
வசப்படுமே உண்மையான மகிழ்ச்சி.

மகிழ்விருந்தால் வசப்படுமே வையகத்தில் பிடிப்பு.
அந்த பிரியத்திலே ஒற்றுமையாய் சேருவமே ஒன்றாய்
ஒன்று சேர்ந்து வாழ்வதுவே வாழ்வினிலே இன்பம்.இதை
புரிந்து கொண்டு சிறகடிப்போம் சிறுவர்கள் நாங்கள்.

வலைப்பதிவு காப்பகம்