ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

Remember

இனிக்கட்டும் வண்ணங்களாய்.



செவ்வாய், 7 ஏப்ரல், 2015

அகவுதல்!



இமையும் கண்ணும் செய்யாத
ஒரு எழுதாத ஒப்பந்தம்
இது
என் ஊரிற்கும் எனக்குள்ளும்
உலவுவதாக ஒரு உணர்வு.

நிலச் சுவாசம் ஒரு நிர்ணயம்.
அகச் சுவாசமும் அதுவே ஆக
நித்தமும் ஊரக நினைவு சுழல்கள்
எனை அறிந்தோ அறியாமலோ
மனம் சுடும்.

என்ன தவ வாழ்வெழுதுகிறாய்
அன்னமிட்டு அருகிருந்து
அமிழ்தூட்டிய அன்னை நிலம் மறந்தாயோ -
மதியீனம் பூண்டாயோ?
இது வரையில் எதை வரைந்தாய்?
ஊரிற்கும் அது உனை ஈன்றதிற்கும்
என என்பேரிடை ஒரு இதய நெருடல்.
ஆன வரை ஏதாவது வரைந்தாயா?
அயலவர்ளை கலந்தாயா?
ஆய பலன் ஏது?
ஆய்ந்ததுவும்,தீய்ந்ததுவுமாய்
உன் அகத் திணை எதை
இதுவரை பதித்தது?

இப்படி பல் சுவை வினாக்களில்
என் இதயம் உறைந்தே போகின்றது.
ஊர் கூடி தேர் இழுக்க உற்றவரையும்
என் சுற்றவரையும் இயன்றவரை வேண்டினேன்.

அவர்கள் வைதார்களா?
இல்லை எனை நெய்தார்களா?
எனினும் எனை கொய்தார்கள் மறைமுகமாக
என் மனச் சாட்சியடம் அகவினேன்.

அகவுதல் பறவையின் இயல்பு.
ஆயின் நீ அகவுதல் எதன் சாரலென!
வினவும் இந்த வினாவிற்கு பதில் தர
எவர் எம்
(ன்) கரம் பற்றுவார்?

சனி, 4 ஏப்ரல், 2015

போதை,நுகர்வு,பாதிப்பு !

மனித குலம் தன் வாழ்வில் பெருந் தேடலாக கொள்வது வாழ்வின் முதல்படியாக உணவு மற்றும் உறையிடம் உடமைகள்.இவைகளே மனிதனின் முதல் அடிப்படை தேவையாகும்.
இத்தகைய தேவைகளை பூர்த்தி செய்ய பணமே அடிப்படை தேவையாகுகின்றது.
எந்த தொழில் செய்தாலும் அதன் மூலம் பெறும் பணத்தாலேயே அவ் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்கின்றான்.
அது விவசாயமானாலும் விஞ்ஞானமானாலும் பணம் இதன் முக்கிய வரவாகும்.

ஒவ்வொரு மனித குலமும் ஏதோ ஒருவகையில் இத் தேவைகளை பூர்த்தி செய்ய ஆலாய்ப் பறப்பதும் அதற்காக சுலபமான மிகவும் இலகுவானதுமாகவும் விரைவில் பணத்தை உழைப்பதற்காகவும் எப்படி எப்படியோ முனைகின்றான்.

இந்த வகையில் மனிதன் ஒரு போதைக்குள் அகப்பட்டுக் கொள்கின்றான்.
மன அழுத்தம்,குடும்ப பாரம்,சமூக நிந்தனை,சமூக ஆளுமை இவைகளை எதிர் கொள்ள கல்வி மூலம் தன் தேவைகளை ஒரு வகையினர் பூர்த்தி செய்ய அவர்களிற்கும் ஒரு போதையை மனச் சுமையை குறைக்க ஒரு நுகர் பொருளாக பாவனைக்குட் படுத்தப் படுகின்றது.


மனித வாழ்வில் சிலர் தமதான மகிழ்வை,சோகத்தை,துயரத்தை ஏதோ ஒரு போதை மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை ஒரு சமூதாய பழக்கமாக கைக் கொள பழகிவிட்டான்.

இதற்கான புறச் சூழ் நிலை பலவிதமாகும்.
பொதுவாக போதைப் பொருட்களின் பாவனையால் ஏற்படும் தீதை பதிவாக்குவதற்காக மேலதிகமான காரணங்களை முன்னிலைப்படுத்தாமல் அதாவது போதைப் பொருட் பாவனைக்கான புறச் சூழலை பதியாமல் அதன் தீமைகளை பதிவெழுத முனைகின்றேன்.

எமது சூழலில் மிகவும் சாதாரணமாக கிடைக்கும் முதல் போதைப் பொருளாக கள் முதலிடம் பெறுகின்றது.இது இயற்கையாகவே

பனை மூலம் கிடைக்கின்றது.பனை மூலம் கிடைக்கும் இந்த கள் என்பதை தாண்டி வேறு விதமான மக்கள் நுகர்வு பொருளாக பனங்கட்டியை உற்பத்தி செய்வதற்கு பதிலாக விரைவில் பணம் பண்ண கள் முதல் விற்பனைப் பொருளாகின்றது.

நுகர்வோரின் கவனம் வெறும் போதையில் இருப்பதால் அதை தொழிலாக கொள்வோர் தங்களின் வருமானத்தை முதலில் விரைவாக பெற சில சமூக விரோத பாவனைகளை நுகர் பொருட்களாக்கி உலவ விட்டான்.

ஒவ்வொரு மனிதனும் தன் சமூக இழப்பை,எதிர்பார்ப்புகள் உடைந்த பொழுது ஏதோ ஒரு வகை போதையில் அதை மறக்க முனைகின்றான்.
இதில் படித்தவர்கள்,படியாதவர்கள் என்ற பேதமே இல்லை.
உடற் சோர்வென தொழிலாளியும்:,மன அழுத்தமென படித்தவர்களும் ஒரு காரணத்தை முன் வைத்து போதையை தன் சுமை போக்கியதாக கருதுகின்றனர்.அதன் மூலம் தன் சுமைகளில் இருந்து விலகியதாக ஒரு பொய்மையை கட்டி அதனில் மூழ்கி போய்விட போதை ஒரு கற்பக தருவாக இந்த போதை ஏற்றிகளிற்கு வரப் பிரசாதகின்றது.

ஆனால் இதன் பக்க விளைவுகள் தாக்கும் போது சிலர் வழித்துக் கொள்கிறார்கள்.சிலர் அதலேயே மூழ்கி விடுகிறார்கள்.அதாவது விரக்தியில் மாற்று வழியற்று இனி என்ன எனும் இயலாமைக்குள் தள்ளப்பட்டு முடிவில் இறப்பை ஏற்றுக்கொளும் தாழ் நிலைக்குள் வயப்படுகின்றனர்.

எந்த பிரச்சனையையும் நேரடியாக முகம் கொடுக்க தயங்கும் சிலரின் ஊக்கியதாக போதை ஒரு மூலப் பொருளாக பாடு பொருளாகின்றது.இதுவே உண்மையும் கூட.

இவ் வகையில் முதலில்
கள் விற்பனை சமூகத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்குகின்றது.

கள்ளால் ஏற்படும் தீமை
1.வயிற்றுப் புண் இதனால் குடலில் ஏற்படும் பாதிப்பு
2.பசியின்மை
3.நாளடைவில் பார்வையில் தாக்கும்
4வீணான குடும்ப பகை.
5.சமூகத்தினால் ஓரம் கட்டப்படுதல்
6.போதையில் பேசு பொருள் தெரியாமல் வாதப் பிரதிவாதத்தால் ஏற்படும் சண்டை
7.போதையில் ஏற்படும் சண்டையினால் ஆயுத பாவிப்பு
8.தொழிலிற்கு போவதில் ஒழுங்கின்மை.
9.வேலை வாய்ப்பை இழக்கும் புறத் தன்மை.
10.ஒழுக்கம் சீர்குலைய சமூகத்தில் பாலியல் வன் கொடுமைகளை புரிதல்.

இப்படியாக பல வகையில் போதைப் பாவனையால் தீமைகளே அதிகமாகும்.முக்கியமாக போதையினால் எவ்வித நன்மைகளும் ஏற்படுவதில்லை.


சாராயம்!
இதில் ஆல்ககால் மேலதிகமாக இருப்பதால் விரைவில் போதை ஏற்படும் அதே வேளையில் குடலை எரித்து புண்ணாக்கி விடும்.பொதுவாகவே ஆல்ககோல்கள் ஈரலில் சமிபாடடைவதால் ஈரல் அவிந்து அழற்சியாகி இதை குடிப்போரை சாகடித்து விடும்..

கசிப்பு!
எக் காரணம் கொண்டும் நுகரவே கூடாத ஒரு எரி பொருளாகும்.இதை தயாரிப்பதற்கு பாவனைப்படுத்தும் பொருட்கள் சில:
தார்,துருப்பிடித்த இரும்பு,வாழைப்பழம்,இறந்த மிருகங்கள் உதாரணமாக ஓணான்,பல்லி,sprit எனப்படும் ஒரு எரிபொருள்.

இதைப் பாவித்தால் உண்டாகும் உடன் பக்க விளைவுகள்.
குடல் அரிப்பு,ஈரல் எரிதல்,வயிற்றுக் குமட்டல் தாங்க முடியாத வயிற்றெரிவு என்பவைகளால் உடனடி மரணம்.


மேலும் புகைத்தல்!
புகைப்பதினால் புற்று நோய் ஏற்படுமென ஆராட்சிகள் வலியுறுத்துகின்றன.
மேலும் சிகரட் புகைப்பதால் சுற்றிலும் உள்ளவர்கட்கும் பாதிப்பு அவர்களும் சிகரட்டினால் வெளியேறும் புகையை சுவாசிப்பதானால் பாதிக்கப்படுகின்றார்கள்.

கஞ்சா!
இதை ஒருவித மருத்துவப் பொருளாக பாவனையில் அறிமுகமாகி இன்று நாளாந்தம் மக்களிடையே பரவியுள்ள ஒரு நுகர் பொருளாகி விட்டதென வரும் செய்திகாளால் அறிய முடிகின்றது.
இதுவும் ஒரு போதைப் பொருள்தான்.
இதை நுகர்வதால் ஏற்படும் தன்மைகள்.சுற்றிலும் இருப்பவர்களை இனம் காணமுடியாது.பறப்பது போல் உணர்வு ஏற்படும்.ஆதலால் செய்யக் கூடாத பல வினைகளை செய்யத் தூண்டும்.எதையும் பார தூரமாக எடுக்காமல் தானே ஒரு உலகம் என இயங்கச் செய்யும் இயல்புடையது.இதனால் ஏற்படும் பாதிப்பு பல வகையாகும்.

பவுடர் வகை சார்ந்த போதைப் பொருட்கள் பல உண்டு.
அவற்றை ஊசி மூலம் தன் உடம்பில் சுயமாகவே ஏற்றிக் கொள்வார்கள்.
சிகரட்டில் புகையிலையில் கலந்தும் புகைத்துக் கொள்வதும் உண்டு.

பொதுவாக இந்த வகை போதைப் பொருட்களால் ஏற்படுவது தீமைகளே தவிர வேறில்லை.
1.தன் நிலை மறத்தல்
2.எனவே பயமின்றி எத்தகைய இழி செயலையும் செய்யத் தூண்டும்.
3.பல பாலியல் வன் புணர்வுகளும்,கொலை,கொள்ளை,திருட்டு என்பனவும் போதைப் பொருளின் பாவனையால் ஏற்படுவதே தற்போதைய சமூகத்தில் நடக்கும் பல இன்னல்களிற்கு காரணமாகும்.
4.ஒழுக்கம் என்பதை முற்றிலும் நிராரிக்கும் தன்மை இந்த போதைப் பொருளிற்கு உண்டென்றால் அது மிகையாகாது.
5.எவரையும் மதிக்காமல் தான் தோன்றித் தனமாக நடக்கச் செய்யம் நச்சுத் தன்மை கொண்டதே போதைப் பொருட்களின் மூலத் தன்மையாகும்.

போதைப் பயன்பாடுகளை இல்லாதெழிக்க சிறந்த மார்க்கம்.
அது பற்றிய சரியான விழிப்புணர்வூட்டுதல்.
எமது ஊரில் விளையாட்டாக ஒரு பொழுது போக்காக கருதியே கள்ளுக் குடித்தல்,பீடி,சிகரட் புகைத்தல் என இப் பழக்கத்திற்கு அடிகோலுகின்றார்கள்.நாளடைவில் இதுவே பெரும் பழக்கமாகி அதற்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றார்கள்.இப் பழக்கம் எமது ஊரில் என்றில்லை பொதுவாக எல்லா தேசங்களிலும் இதுவே நடைமுறையாகும்..

எனவே இந்த நுகர்வுப் பொருட்களை கொள்வனவு செய்தலை நிறுத்த மாற்று யோசனைகளையும்,வழி முறையையும் சமூகம் சிந்தித்து செயலாற்ற வேண்டும்.

சமூகத்தில் இளைய தலைமுறைகளிடம் மனம் விட்டு கலந்துரையாடி அவர்களின் தேவைகளை அறிந்து அதற்கான வழிமுறைகளை கைக் கொள்வதால் சீரழியும் இளைய தலைமுறைகளை இப் பழக்கத்திலிருந்து மீட்கலாம் என்பது தெளிவாகும்.

போதை அது எதனால் வந்தாலும் அதை நாடாமல் மனிதனாக வாழும் சிறந்த வழிகளாக வாசித்தல்,எப் பிரச்சனையையும் மனம் விட்டு உரையாடல்.நக்கல்,கிண்டல்,அவமானப்படுத்துதல் உதாசீனம் செய்தல்,மற்றவர் மனம் புண்படும்படி நடத்தல்,புரிந்துணர்வில்லாமை,விட்டுக் கொடுக்காமை,ஒருங்கு சேர முடியாமல் பழி வாங்கல்.இப்படியான சமூக ஒழுங்கற்ற பழக்கங்களை ஒழித்தாலே பெரும்பாலும் போதைப் பொருள் நாடும் மனங்களை வெல்லலாம்.

இதில் வெட்கத்திற்குரிய செயலாக வாழ்வில் நடக்கும் எந்த நிகழ்விற்கும் போதைப் பொருளை நாடுதல் கிட்டத்தட்ட ஒரு பண்பாடகவே மாறியது காலத்தின் கோலமல்ல.நாமாகவே இதை நீட்சியடைய வைத்துவிட்டோம்.
பியர்,சாரயம் இல்லா நிகழ்வு ஒரு அர்த்தமற்ற நிகழ்வாக சமூகத்தில் புரையோடியிருப்பதே வேதனையாகும்.

புரிந்து நடப்போமே.
போதைப் பொருள் பாவனையை அறவே தீண்டாமல் ஒரு புதிய சமூதாயத்தை உருவாக்க இளையோர்கள் நிச்சயம் உழைத்தால் இத் தீய பழக்கத்தை நம் சமுதாயத்திலிருந்து நீக்கலாம்:
செய்வார்கள் செய்யவேண்டும் எனும் ஆதங்கத்துடன்.



மனம் நிறைக்கும் ஏக்கம் எதுவோ?


புலம் பெயர் வாழ்வில்
மறைந்தே போகிறது என் மண்ணின் வாசனை

ஏன்?
மனிதர்களின் வாசனையும் வாடையும்தான்
மண் வாசனை!
மன ஏக்கம் ஒரு இளந்தளிரில் பூத்த மலர் போல
மனம் நிறைய ஒட்டிய வாசனையது.

சமூக காற்றில் நாளும் பொழுதும் பூத்த மலரல்லவா?
ஏன் ஆத்மாவும் அகவும் உறவும் தோய்ந்த
நிலமதில் நிறைந்தே பூத்த மலரல்லவா?
ஒவ்வொரு இதழும் வடு சுமக்கின்றது
ஆறாத வலி தரும் வலியில்.

காலம் ஒரு கலத்தை திண்மையாகவே பூட்டியிருக்கும்
மனக் கலசத்தில்.
எதனாலும் மறைக்க முடியாத ஒரு கறையாக
பெருங்கதையாக--

ஒரு கால ஓடு தளம்
நிறைவாக பொருள் தேடும் தளமாக
திரைகடலோட வைத்தது.
திரவியம் மட்டுமே தேடும் தலமது

காலக் காற்று திசை மாற,மாற
ஒய்யாரம் தேடி மனம் ஊளையிட்டதுவோ?
ஆதலால் அனந்தம் தேடி
ஆசைக்காற்று
அயல்களையும்,வயல்களையும்
களைந்தது.
குடும்பமாய் குடியேறி குதூகலம் விதைத்தது.
தடுமாறாத ஓடமாய்
தாளமது தப்பாமல் நாம் தப்பியதாய்
எகத்தளமாய் ஏற்றமிறைத்த மனமின்றி-இன்று
அகத் தளமாய் உறவு தேடி உயிர் வாடும் நாளாய் தினம் கலையும்.

வானம்பாடி என ஒரு பெரும் நினைப்பெழுதி
புழுதி கலைந்து கரைந்து போனதாக
காலம் கடந்து மனம் ஓர்மமாய்
ஒரு தளம் தேடும்
நரை நிறை தலைகள்-தினம்
சமூக உறவெழுதும் ஞாயமாய்

இரு தள சமூக பண்பாடு ஒரு புறம்
இடம் பெயர் அகதி என மறு புறம்
இரு பெரும் மனுக்களில் வாழ்வு
சம நிலை தேடும்-
மொழி புரியாத போதும் வழி கண்டதாய் ஒரு அறம்
பல கழிவுகளையும் களித்து
வழி ஏற்றியது பலவாய் புலவாழ்வு.


பணம்,காசு
துட்டு
பொருள் ஆதாரம்
ஆதார்சமென மனம் தனம் சேர்த்தது.
ஆனால் இருளுடன் என்பதை இதயம் எண்ண மறந்தது.
மறைத்தது.

காத்திரமாக சொல்வதானால்
அக் காலம் பணம் மிகப் பெருந்தேவை.
காலத்தின் அறமும் அதுவாக
ஒரு வகையில் கட்டளையும் அதுவே ஆக!

இன்று வாழ்வெழுதும் எம் இளைய தலைமுறைக்கு புரியாது.
அன்று நாம் வாழ்வெழுத துலைத்த அருவிகளை.
நின்று நிதானம் பொலிந்தே பதிகின்றேன்-ஞாயங்களை
நியங்கள் ஒரு போதும் தாளம் தப்பாது.

அதன் தொகுப்பே-
இன்று இந் நல் நிலையும் கூட,
ஆயினும் ஒன்றதன் இழப்பிலேதான்-
மற்றொன்றின் பிறப்பூ –யதார்த்தமும் அதுவே ஆக
கற்கை நெறி கனதி கூட்டியது.

நடந்தது எதுவும் காலப் பிழையும் இல்லை
அன்றி களங்கம் இல்லை-ஆகவே
கலக்கமும் தேவையில்லை-அது
கனிவாகிக் கொழித்தது காலத் தேவையே!


 காலச் சுற்றோட்டம்
திண்ணை மனிதராய்
மலரும் நினைவெழுதும் போதெல்லாம்
உறவுகளும் அதன் உயர்வுகளின்,
உயிர் துடிப்பெழுதும் உள்ளக நாடியாய்.

.

இதையும் மீறி தலை நரை சூட
மனம் சமூகத் களம் நாடும்
இதுவே அறமென அகம் ஆடும்
மறவாதே!

எதிர் கால நினைவெழுதி
எம் சமூக உறவு நாடு(ம்)
புல வாழ் உறவுகளே!
நிலம் வாழ் உறவுகளும் புரிந்தெழ!

மனம் நிறைந்தே மண் வாசம் அகம் சூடும்.
என்றும் மறைந்தும் மறைத்தும் போகா
மண் வாசம்.மனை ஏக!         

வலைப்பதிவு காப்பகம்