
இந்த
வக்கிரம் வகைத்தவரா -உன்
உத்திரம் வகுப்பார்?
முத்திரமான எங்கள் சத்திரியர்களின்
சித்திரம் பார்.
எத்திரை வந்தபோதும்,
பத்தரையான பவித்திரர்கள்.
விதித்திரை விண்ட வீரியர்கள்-அவர்
தேசத்திற்காய்
வீரச் சமர் கொண்டவர்கள்,அவரைக்
கொன்ற பின்னும் சேடம் வரையும்-
ஆரியத் தரை அகம் ஆய்ந்தாயா?
தினமும்,
வன்மையாய் முகம் மறைக்கும்-
மூர்க்கம் காண்.
வெறும் தரை வழிப்பாதையில்,
பார்வை வேண்டாம்.
புனர் வாழ்விற்கு வகையில்லை,இவர்
அபிவிருத்தியென்று எதை ஆய்கின்றார்?
அடுத்த வேளை கஞ்சிக்கு அதரம் அற்று,
படுத்த வேளை கிஞ்சிதமாய் கிராகதர்கள் கிள்ளும்-
இராணுவ சக்கரம் எந்த சதங்கை கட்டும்?
புராணம் பாடும் புலமே உன் உலவலிற்காய்,
உறுப்பறுத்து உசாவல் நலமென்னும் நர்த்தனம் அறு.
வெறும் வெளிகள் உள்ளம் உலவாது.
ஊடுகள் உணர சிலாகி.
தாறு மாறாய் தடம் புரண்ட தமிழ் நிலம்.
ஊறு கொடுத்த தேறுகள் தேச வீதியெங்கும்.
ஆனால் நீவிரோ!
வெற்றுக் காட்சியில் வேகம் கரைத்து,
எம் வேதம் மறைத்து,
இப்படியா உரைப்பாய்?
உல்லாச பயணத்திற்காய் உன் உறுப்பமைக்கும்
சல்லாபத்திற்காகவா?
சவக்காடானது எம் தேசம்?
சுய நல சூத்திரர்களே!
நலமானதாய் நாடு என-
நா ஒளித்து நடுகல் நடாதே.
நீதி,நியம் ஒளித்து எதையும் ஒவ்வாதே.
எதையும் நாட்டிற்காய் ஒப்பாத சுயமே!
உன்-
சுவடனைத்தும் பாவியர்கள் பாதம்.
பதகழித்து பாகை சரித்து பல்லாயிரமாய்-
பாடை விரித்தவர் தடமது.
பரணியிலும் பரவும் பதமது.
உன் சாவால் கூட மறக்க முடியாத,கூடாத
மனக் காயமது.
சொகுசு பேரூந்து பிரயாணத்திற்காய் எம்
தேசப் புதல்வர்கள் பிராணன் விடவில்லை.
அன்று எரிந்தது அவர் களம்-நாளை
அது உன் மனையின் மீதும் பெ(ம)ருகும்.
மறக்காதே நிச்சயம் இதுவும்-!
பலமுள்ளதே வாழும் இது வாழ்வியல் நியதி.
அது பணமாக,கருவியாக,படைபலமாக
பலவித முகம் கொள்ளும்-அற்ற போதே
அத்தனையும் அடிவருடும்.அதுதான்
இன்று சிறீலங்காவில் ஆரியக் கடைவிரிப்பு.
ஈழத்-
தமிழரின் அவலச் சரிவு.
ஆக மீண்டும் பலம் கறுக்க
கே.பி யின் கேனத்தனம்,கோத்தாவுடன்
கோமயம்.
புலமே சுதாகரிக்கும் சுயம் வேண்டும்.அன்றேல்
ஆதியுடன் அந்தமாக அத்தனையும்
கதி அதோ கதிதான்.
அரசியலையும் ஆத்தமார்த்தாமாய் அகம் கொள்.
தூரத்துப் பச்சை பசுமையே இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக