செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

நிறை அகவை ஓன்றாக!


முத்து முத்தாய் சொல்லெடுத்து
முத்தங்களை சேர்த்தணைத்து
சொத்துக் சொத்தாய் சேர்த்திருப்பேன்
உன் தகமே
சொக்க வைப்பாய் எம் அகமே.

எங்கள் வசம் வந்த வம்சம்
வந்துதித்தாய் என்றும் இன்பம்.
தங்க வைத்தே தங்குகின்றாய் 
செந்தோளின் சந்தமெலாம்.
மென் பூவாய் மலர்ந்தவனே
மெய்யில் இன்பம் மீட்பவனே
தண்மை ஒளி வீசி நின்று
தகைகின்றாய் நன் பரப்பே.

முதல் பேரன் முத்தென்பார்
வந்துதித்த சொத்தென்பார்.
முத்தோ சொத்தோ நீ எம் முதுசமோ
எம் முன்னோர் வழி நின்ற கலசமோ
எண்ணமெலாம் சிறப்பாய் எம் குலமே

முகிழ்க்கின்றாய் புன் சிரிப்பு
முதிர்கின்றோம் எம் சிரிப்பு
உதிர்க்கின்றாய் அனுதினமும்
உயிர்க்கின்றோம் புது வரவாய்

வம்சம் வந்த பேரழகே.சஞ்சய்
எனும் தேரழகே
அம்சம் கொண்டு வந்தவனே
அகமிருந்து ஆள்பவனே
ஆயுள் நிறைவாய் வாழ்வெழுத
எம் ஆலிங்கனம் சுமந்தே நீ வாழ்க.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்