வெள்ளி, 18 மார்ச், 2016

பூவரசம் பூ பார்க்க!

பூவரசம் பூ பார்க்க
புளகாங்கிதமடையும் மனசாக
ஆவல்கள்
ஊரேவ ஆசையை சுமக்கின்றது.

ஊர் வந்தடைந்த பின்
உவப்புக்கள் எல்லாம்
வேரடைத்து போகின்றது
பார் இந்த அலை பாயும் மனதில்
பங்கமான பரப்புக்களை

காரிருள் சூழ்ந்தது ஒரு சோகம்
என்
நாவடைத்து நலியும்
பேரிருளில் எல்லாம் மறைந்ததாக
ஊர் ஒளி மறையும்.

நினைவெரித்து
செல்லரிக்கும் நியங்களால்
கனவெரிந்து போனகாலம்
மனம் கொள்ள முடியாமல்
சோம,பத நீர் பானத்தில்
குடிகொள்ளும் குவலயம்
இந்த இழி நிலை மாறுமா?

மாறாத ஒன்று
அது மாற்றம்தான் என்போரே!
மாறுமா எம் மண்ணெரிந்த நிலை
ஆறுமா?
ஆற்றாமையால் அகமெரிந்து போகும் போதெல்லாம்
தனிமையில் தள்ளாடும்
இனிமையற்ற இரவுகளாக
கனிமை கண் மறைத்து போகின்றதே.

அண்மித்ததெல்லாம்
கண்ணிமைக்கும் காலத்தால்
மண்ணிழந்து போனதை
தண்மையாகவா
எண்ணிட முடியும்?
ஊர் வந்தடைந்த பின்
உவப்புக்கள் எல்லாம்
வேரடைத்து போகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்