புதன், 25 பிப்ரவரி, 2015

நஞ்சுண்ட காடு ஒரு சிறு விமர்சனம்!

வாசித்தல்
சுவாசித்தல்
லயித்து ரசித்து
அதன்
உணர்வுகளுடன் ஒன்றி
ஒரு
புத்தகத்தை வாசித்தல்.

மனதை ஒரு நிலையாக்கி
கதை சொல்லியின்
உணர்ச்சியை கண்களால் உள் வாங்கி
இதயத்துடன் நெட்டுயிர்த்து
வாசிப்பது இருக்கே-அது
ஒரு சுகானந்த அனுபவம்.

ஒரு படைப்பை உள்வாங்கும்போது
அதனுடன் ஒன்றிணைய
படைப்பாளி பாவிக்கும்
உரையாடல் அல்லது
நிகழ்வுகளை விளக்கும் விதத்தால்
இதயம் விசிறிக் கொள்கின்றது.
ஆற்றுகைக்குட்டபடுத்த இல்லாத வார்த்தையை நாடி
மனம்
நெடிதுயர் கொள்கின்றது.

கதை சொல்லியின் படிமனான எழுத்துக்கள்
காட்சிகளை மனதில் ஒளிப்படமாக பதிவெழுதி
உருகி
உருக் கொள்கின்றது.
இது
படைப்பாளியின் வெற்றி்

நீண்ட இடைவெளியின் பின்
இன்று வாசித்துச் சுவைத்த ஒரு
போரிலக்கியம்
"நஞ்சுண்ட காடு"
இந்த ஈழத்து போராளியான படைப்பாளிக்கு
வாழ்த்தெழுதி அவன் வரிகள்
தந்து சுவையெழுதி அவனுடன்
அளவளாவ ஏற்படும் ஆசை-
அது
இயல்பானது.
 காலம் கனிந்தால் அது வயப்படும்.

நிற்க!
இரவல் வார்த்தைகளை பாவிப்பதில்லை
எனும் பாரிய நிலைப்பாடு.
இதில் எதையும் வரிக்க பின் நிற்கின்றது.
இது
எனதான ஆவல்
என்
ஆதங்கத்தின் படிகள்.

குணா கவியழகா!
எங்கிருக்கின்றாயோ
உன்னிடமிருந்து மேலும்
எதிர்பார்க்கிறேன்.
சுவைபட
வேதனைகளை,
அதில் படர்ந்த சுமைகளை
அதை கையாண்ட நிலைப்பாடுகளை......

தீர்க்கமான சேதி திரு.யோகி அவர்கள்.




புதன், 18 பிப்ரவரி, 2015

கனவேட்டு கதவாய்!

தினமும் கனவுகளோடு போராடும் மனம்.
எவ்வித ஆக்கபூர்வமும் இல்லாமல்
ஏனிந்த கனவுகள்?
எங்கோ ஒரு எதிர்பார்ப்பு தொக்கி நிற்கிறதோ என்னவோ?
ஆவலற்று உறக்கத்தை தேடும் உடலாய்
ஒவ்வொரு இரவும் கலைகின்றது.

எதிர்பார்ப்புக்கள் சார்ந்ததாகவும் இல்லாமல்
இயலாமையை குறிக்கவும் முடியாமல்
ஏதோதோ பிண்ணணியில்
சம்மந்தமே இல்லா கனவுப் பொதிகள்
பிணங்கிக் கொள்கின்றன.

வயது கூடிப்போனால்
இப்படித்தான்
அடிக்கடி கடிக்குமோ கனவுகள்?
இப்படியும் நினைத்துப் பார்க்கிறேன்.
வேலை அதிகமானால் அசதியினால்
தூக்கம் தானாக வரும்.
நிறைவாக அடித்திருக்கணும் தண்ணி.
இல்லையெனில்
இப்படியும் ஒரு கருத்து உலவ!

வேலைத் தளமோ கனதியானது
பல வேலைகள்.
பழுவற்ற தன்மைகள்
ஆயினும்
அசதி வருவதே இல்லை.
ஆ(ள)ழப் பழகியதால் அனுசரணையானதோ?

எனில்!
கனவுகளும்
கற்பனைகளும்
இல்லாமல் தூங்க
ஏது செய்யலாம்?

உடற்பயிற்சி???!
மனத் தளர்ச்சி வருவதே இல்லை.
மகிழ்சிக்கும் குறைவில்லை.
ஆயின்
ஏனிந்த அயர்ச்சி?
தூக்கக் கலசத்தில்,
கனவுகளின் மலர்ச்சி?

தன் மொழியில் உரையாடி,
தன் உணர்வை பகிர
அருகாமை தரும்
அகம் ஒழுக,
யாருமே அற்ற உலகிது

எனவே!
உ்ளளத்தை,உள்ளதை,
தண்மையாக்க,
தலையவையில் தகம் தேடுகின்றன.
தன்
அக நிறைவு காணவே!

ஏதோ எங்கோ அலைமோதி
தலை கோதுகின்றது.
தகமற்ற கனவுகளாய்.
அனு தினமும் என் மனவேவி

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

புல வாழ்வின் தல வாழ்வு!

ஆரோக்கியமாய்
அருகிருந்து
அளாவளாவவும்
அருகாமை தரும்
கருத்துக்களை
அபிப்பிராயங்களை
மனம் விட்டு கதைத்தேக
யாருமே இல்லா தனியுலகிது.


வேலைத் தளம்
ஒண்ணும் மோசம் இல்லை.
பொழுது தானாகவே பெரும்
கலாய்ப்புக்களுடன் போயே போய் விடும்.

வேலை முடித்து
மனையேகினால்
சிறையில் சிறை வைத்ததாய்
சித்தம் தினம் அகவும்.

ஆம்!
இது நியமானது.
மறுப்பதற்கோ,
மறைப்பதற்கோ ஏதும் இல்லை.

யாருடன்
எதை அளவளாவுவது?
இத் தளமும் இல்லையெனில்
சித்தம் செத்தே போய்
ஒரு பிரம்மையில் லயித்திருக்கும்.
ஒரு
அழகியலான பொழுது போக்கு உண்டா?
அட!
நால்வருடன் இல்லை அறுவருடன் சேர்ந்து
ஒரு நாலு சீட்டு விளையாட
கரம் போட்---
இல்லை
சதுரங்கம் விளையாட,

அட போய்யா!
ஒரு தாயக் கட்டை விளையாட கூட
யாருமே அற்ற தனியுலகிது.
கோடை காலத்திலாவது
துடுப்பெடுத்தாட,
கரப்பந்தாட
எவருமே அற்ற பொழுது போக்கற்ற லயமிது.

சரி
ஒரு நடை நடந்து நீச்சலடித்து வர
எவ்வித கூட்டும் இல்லா
புலம் பொருதா வாழ்விது.
வார விடுமுறையில் கூட
யாருடனும் கூடி பொழுதேத்த வழியற்ற நிலை.
நாலு பேரை சந்திப்பதானால்
எங்காவது ஒரு வைபோக நிகழ்வு தேவை.
அங்க மட்டும் என்ன வாழுதாம்?
கடந்த கால இரை மீட்பு.
அல்லது வேலைத்தள அரட்டை
அத்துடன் போதையேற்றல்

சீ---சீ
என போய்விடும் வக்கற்ற தகமையால்.
ஒரு ஐக்கியமான
அக மகிழ்வு சூடும்
ஒரு உணர்வு பூர்வமான உரையாடல்
ம் --ம்
கிடையவே கிடையாது.

ஊரைப் பற்றி
உவப்பைப் பற்றி வாய் கிழிய அலட்டும் சமூகம்
நிதி பற்றியோ .தம்
நீதி பற்றியோ அறவே மூச்சு விடாது.
போகட்டும்.
நற்பொழுது கழிய நல்ல விடயமாவது ???--
புல வாழ்வு
புலர் வாழ்வல்ல.

ஒரு சிறையில் சுதந்திரமாக ஏதோ அலைபாய
அல்லல்படுகிறோம்.
சில இழப்புக்களால் தான்
சில வரவுகளை நுகரமுடியும்.

ஆனால்
எந்த ஒரு வரவுக்கும் ஈடில்லை
இவ் வகை இழப்புக்கள்.
இது நியம்!
ஆயினும் மாற்று வழி ஏதும் இல்லை.
தேற்றம் கூட இனி மாற்றத்திற்கு உட்பட்டதல்ல.
ஊட்டமாகவே ஊறி விட்டது.

புல வாழ்வு.
இதில் ஏக்கங்கள்
எத் தகு தாக்கத்தையும் மொள்ளாது.
ஏனெனில்
நாம்
ஓர் புலர் வாழ் சமூகம்.
இந்த யுகம் தனியுலகம்.
இந்த ஏரியாவுக்குள் நில வாழ் சமூகம் கருத்தெறிவது.
நம் கருக் கலைப்புபோல--
எனினும் நான் கருத்துக்களை எதிர்பார்கிறேன்.
எல்லையே இல்லாமல்!

முற்றுப் புள்ளி இந்த இடுகைக்கு இல்லை.
ஆயினும்
முற்றுப் பெறாமலே முடிக்கு முன்
எம் தாயகக் புல வாழ் கவிஞனின்
நாலு வரியுடன்---

இது
சதந்திர தாகம் எனும் இறுவெட்டில்
பதிவாகி பலர் செவிகளில் ரீங்காரம் கொட்டி
மெட்டுக் கட்டிய வரிகள்.

"நரை வீழ்ந்து நடை தளர்ந்து போச்சே!
இந்த
தொலை தூர வாழ்க்கை திசை மாறிப் போச்சே!
மண் வாசம் தேடி மனம் மகிழுதே(அலையுதே)
மலரும் நினைவுகள் நெஞ்சை வந்து நெருடுதே.!"

புதன், 11 பிப்ரவரி, 2015

அவி பாகமது!

அஞ்சா நெஞ்சக ஆளுமை ஒரு வகை
துஞ்சாத உள்ளகமும்
துயில் மறந்த தெள்ளகமுமாய்
பயில் நடை தெளித்த
பைந்தமிழர் பாதம் பட்ட இடமிது

இன்று
அறுவடையெலாம்
தறுதலையாக்கி
தண்ட பிரசண்டம் வீசிய
சண்டாளர்களின் காலடியில்
பசுமைகள் அழிந்தன.

அழிந்தனவைகள்
பின்பொரு காலம்
காலப் பரிமாணத்தால்
ஞாலத்தில் பரிவடிவம் பெறுதல்
இயற்கையின் நியதியாம்








சில
பரப்புக்கள் பாரில் விழைந்து
தளிர்த்து
கொழித்து விழித்தனவாய்
பதிவுகளில் பார்த்தேன்.
வரலாறும் அதை வையகப் பரப்பில்
விரித்தே பதித்துள்ளன.

வடிவங்கள் மாறலாம்
படிமானங்களும் பரிமாணம் மாறலாம்.
பசுமையாய் படிந்த விடி வானம் மாறதல்லவா?
சுமைகள்
சுமந்தவர்களின் சுழிகளிலிந்தே
சுழிகள் பிறக்கும்.






இது
வழி வழியாய் வந்த வரம்.
விழிகளை விற்று ஒரு சித்திரம்
கொள்வனவு செய உளம் ஒப்பார்.
வரும்
பழிகளை களைய விழி பார்ப்பார்.
ஒரு
மொழியான பார்வையில்.

அது தமிழர் தம் தாயகமாய்.






திங்கள், 2 பிப்ரவரி, 2015

போதை, நுகர்வு பாதிப்பு!



போதைப் பொருட் பாவனையின் தீமைகள்.
மனித குலம் தன் வாழ்வில் பெருந் தேடலாக கொள்வது வாழ்வின் முதல்படியாக உணவு மற்றும் உறையிடம் உடமைகள்.இவைகளே மனிதனின் முதல் அடிப்படை தேவையாகும்.
இத்தகைய தேவைகளை பூர்த்தி செய்ய பணமே அடிப்படை தேவையாகுகின்றது.
எந்த தொழில் செய்தாலும் அதன் மூலம் பெறும் பணத்தாலேயே அவ் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்கின்றான்.
அது விவசாயமானாலும் விஞ்ஞானமானாலும் பணம் இதன் முக்கிய வரவாகும்.

ஒவ்வொரு மனித குலமும் ஏதோ ஒருவகையில் இத் தேவைகளை பூர்த்தி செய்ய ஆலாய்ப் பறப்பதும் அதற்காக சுலபமான மிகவும் இலகுவானதுமாகவும் விரைவில் பணத்தை உழைப்பதற்காகவும் எப்படி எப்படியோ முனைகின்றான்.

இந்த வகையில் மனிதன் ஒரு போதைக்குள் அகப்பட்டுக் கொள்கின்றான்.
மன அழுத்தம்,குடும்ப பாரம்,சமூக நிந்தனை,சமூக ஆளுமை இவைகளை எதிர் கொள்ள கல்வி மூலம் தன் தேவைகளை ஒரு வகையினர் பூர்த்தி செய்ய அவர்களிற்கும் ஒரு போதையை மனச் சுமையை குறைக்க ஒரு நுகர் பொருளாக பாவனைக்குட் படுத்தப் படுகின்றது.

மனித வாழ்வில் சிலர் தமதான மகிழ்வை,சோகத்தை,துயரத்தை ஏதோ ஒரு போதை மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை ஒரு சமூதாய பழக்கமாக கைக் கொள பழகிவிட்டான்.

இதற்கான புறச் சூழ் நிலை பலவிதமாகும்.
பொதுவாக போதைப் பொருட்களின் பாவனையால் ஏற்படும் தீதை பதிவாக்குவதற்காக மேலதிகமான காரணங்களை முன்னிலைப்படுத்தாமல் அதாவது போதைப் பொருட் பாவனைக்கான புறச் சூழலை பதியாமல் அதன் தீமைகளை பதிவெழுத முனைகின்றேன்.

எமது சூழலில் மிகவும் சாதாரணமாக கிடைக்கும் முதல் போதைப் பொருளாக கள் முதலிடம் பெறுகின்றது.இது இயற்கையாகவே
பனை மூலம் கிடைக்கின்றது.பனை மூலம் கிடைக்கும் இந்த கள் என்பதை தாண்டி வேறு விதமான மக்கள் நுகர்வு பொருளாக பனங்கட்டியை உற்பத்தி செய்வதற்கு பதிலாக விரைவில் பணம் பண்ண கள் முதல் விற்பனைப் பொருளாகின்றது.

நுகர்வோரின் கவனம் வெறும் போதையில் இருப்பதால் அதை தொழிலாக கொள்வோர் தங்களின் வருமானத்தை முதலில் விரைவாக பெற சில சமூக விரோத பாவனைகளை நுகர் பொருட்களாக்கி உலவ விட்டான்.

ஒவ்வொரு மனிதனும் தன் சமூக இழப்பை,எதிர்பார்ப்புகள் உடைந்த பொழுது ஏதோ ஒரு வகை போதையில் அதை மறக்க முனைகின்றான்.
இதில் படித்தவர்கள்,படியாதவர்கள் என்ற பேதமே இல்லை.
உடற் சோர்வென தொழிலாளியும்:,மன அழுத்தமென படித்தவர்களும் ஒரு காரணத்தை முன் வைத்து போதையை தன் சுமை போக்கியதாக கருதுகின்றனர்.அதன் மூலம் தன் சுமைகளில் இருந்து விலகியதாக ஒரு பொய்மையை கட்டி அதனில் மூழ்கி போய்விட போதை ஒரு கற்பக தருவாக இந்த போதை ஏற்றிகளிற்கு வரப் பிரசாதகின்றது.

ஆனால் இதன் பக்க விளைவுகள் தாக்கும் போது சிலர் வழித்துக் கொள்கிறார்கள்.சிலர் அதலேயே மூழ்கி விடுகிறார்கள்.அதாவது விரக்தியில் மாற்று வழியற்று இனி என்ன எனும் இயலாமைக்குள் தள்ளப்பட்டு முடிவில் இறப்பை ஏற்றுக்கொளும் தாழ் நிலைக்குள் வயப்படுகின்றனர்.

எந்த பிரச்சனையையும் நேரடியாக முகம் கொடுக்க தயங்கும் சிலரின் ஊக்கியதாக போதை ஒரு மூலப் பொருளாக பாடு பொருளாகின்றது.இதுவே உண்மையும் கூட.

இவ் வகையில் முதலில்
கள் விற்பனை சமூகத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்குகின்றது.

கள்ளால் ஏற்படும் தீமை
1.வயிற்றுப் புண் இதனால் குடலில் ஏற்படும் பாதிப்பு
2.பசியின்மை
3.நாளடைவில் பார்வையில் தாக்கும்
4வீணான குடும்ப பகை.
5.சமூகத்தினால் ஓரம் கட்டப்படுதல்
6.போதையில் பேசு பொருள் தெரியாமல் வாதப் பிரதிவாதத்தால் ஏற்படும் சண்டை
7.போதையில் ஏற்படும் சண்டையினால் ஆயுத பாவிப்பு
8.தொழிலிற்கு போவதில் ஒழுங்கின்மை.
9.வேலை வாய்ப்பை இழக்கும் புறத் தன்மை.
10.ஒழுக்கம் சீர்குலைய சமூகத்தில் பாலியல் வன் கொடுமைகளை புரிதல்.

இப்படியாக பல வகையில் போதைப் பாவனையால் தீமைகளே அதிகமாகும்.முக்கியமாக போதையினால் எவ்வித நன்மைகளும் ஏற்படுவதில்லை.

சாராயம்!
இதில் ஆல்ககால் மேலதிகமாக இருப்பதால் விரைவில் போதை ஏற்படும் அதே வேளையில் குடலை எரித்து புண்ணாக்கி விடும்.பொதுவாகவே ஆல்ககோல்கள் ஈரலில் சமிபாடடைவதால் ஈரல் அவிந்து அழற்சியாகி இதை குடிப்போரை சாகடித்து விடும்..

கசிப்பு!
எக் காரணம் கொண்டும் நுகரவே கூடாத ஒரு எரி பொருளாகும்.இதை தயாரிப்பதற்கு பாவனைப்படுத்தும் பொருட்கள் சில:
தார்,துருப்பிடித்த இரும்பு,வாழைப்பழம்,இறந்த மிருகங்கள் உதாரணமாக ஓணான்,பல்லி,sprit எனப்படும் ஒரு எரிபொருள்.

இதைப பாவித்தால் உண்டாகும் உடன் பக்க விளைவுகள்.
குடல் அரிப்பு,ஈரல் எரிதல்,வயிற்றுக் குமட்டல் தாங்க முடியாத வயிற்றெரிவு என்பவைகளால் உடனடி மரணம்.
 

மேலும் புகைத்தல்!
புகைப்பதினால் புற்று நோய் ஏற்படுமென ஆராட்சிகள் வலியுறுத்துகின்றன.
மேலும் சிகரட் புகைப்பதால் சுற்றிலும் உள்ளவர்கட்கும் பாதிப்பு அவர்களும் சிகரட்டினால் வெளியேறும் புகையை சுவாசிப்பதானால் பாதிக்கப்படுகின்றார்கள்.

கஞ்சா!
இதை ஒருவித மருத்துவப் பொருளாக பாவனையில் அறிமுகமாகி இன்று நாளாந்தம் மக்களிடையே பரவியுள்ள ஒரு நுகர் பொருளாகி விட்டதென வரும் செய்திகாளால் அறிய முடிகின்றது.
இதுவும் ஒரு போதைப் பொருள்தான்.
இதை நுகர்வதால் ஏற்படும் தன்மைகள்.சுற்றிலும் இருப்பவர்களை இனம் காணமுடியாது.பறப்பது போல் உணர்வு ஏற்படும்.ஆதலால் செய்யக் கூடாத பல வினைகளை செய்யத் தூண்டும்.எதையும் பார தூரமாக எடுக்காமல் தானே ஒரு உலகம் என இயங்கச் செய்யும் இயல்புடையது.இதனால் ஏற்படும் பாதிப்பு பல வகையாகும்.

பவுடர் வகை சார்ந்த போதைப் பொருட்கள் பல உண்டு.
அவற்றை ஊசி மூலம் தன் உடம்பில் சுயமாகவே ஏற்றிக் கொள்வார்கள்.
சிகரட்டில் புகையிலையில் கலந்தும் புகைத்துக் கொள்வதும் உண்டு.

பொதுவாக இந்த வகை போதைப் பொருட்களால் ஏற்படுவது தீமைகளே தவிர வேறில்லை.
1.தன் நிலை மறத்தல்
2.எனவே பயமின்றி எத்தகைய இழி செயலையும் செய்யத் தூண்டும்.
3.பல பாலியல் வன் புணர்வுகளும்,கொலை,கொள்ளை,திருட்டு என்பனவும் போதைப் பொருளின் பாவனையால் ஏற்படுவதே தற்போதைய சமூகத்தில் நடக்கும் பல இன்னல்களிற்கு காரணமாகும்.
4.ஒழுக்கம் என்பதை முற்றிலும் நிராரிக்கும் தன்மை இந்த போதைப் பொருளிற்கு உண்டென்றால் அது மிகையாகாது.
5.எவரையும் மதிக்காமல் தான் தோன்றித் தனமாக நடக்கச் செய்யம் நச்சுத் தன்மை கொண்டதே போதைப் பொருட்களின் மூலத் தன்மையாகும்.

போதைப் பயன்பாடுகளை இல்லாதெழிக்க சிறந்த மார்க்கம்.
அது பற்றிய சரியான விழிப்புணர்வூட்டுதல்.
எமது ஊரில் விளையாட்டாக ஒரு பொழுது போக்காக கருதியே கள்ளுக் குடித்தல்,பீடி,சிகரட் புகைத்தல் என இப் பழக்கத்திற்கு அடிகோலுகின்றார்கள்.நாளடைவில் இதுவே பெரும் பழக்கமாகி அதற்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றார்கள்.இப் பழக்கம் எமது ஊரில் என்றில்லை பொதுவாக எல்லா தேசங்களிலும் இதுவே நடைமுறையாகும்..

எனவே இந்த நுகர்வுப் பொருட்களை கொள்வனவு செய்தலை நிறுத்த மாற்று யோசனைகளையும்,வழி முறையையும் சமூகம் சிந்தித்து செயலாற்ற வேண்டும்.

சமூகத்தில் இளைய தலைமுறைகளிடம் மனம் விட்டு கலந்துரையாடி அவர்களின் தேவைகளை அறிந்து அதற்கான வழிமுறைகளை கைக் கொள்வதால் சீரழியும் இளைய தலைமுறைகளை இப் பழக்கத்திலிருந்து மீட்கலாம் என்பது தெளிவாகும்.

போதை அது எதனால் வந்தாலும் அதை நாடாமல் மனிதனாக வாழும் சிறந்த வழிகளாக வாசித்தல்,எப் பிரச்சனையையும் மனம் விட்டு உரையாடல்.நக்கல்,கிண்டல்,அவமானப்படுத்துதல் உதாசீனம் செய்தல்,மற்றவர் மனம் புண்படும்படி நடத்தல்,புரிந்துணர்வில்லாமை,விட்டுக் கொடுக்காமை,ஒருங்கு சேர முடியாமல் பழி வாங்கல்.இப்படியான சமூக ஒழுங்கற்ற பழக்கங்களை ஒழித்தாலே பெரும்பாலும் போதைப் பொருள் நாடும் மனங்களை வெல்லலாம்.

இதில் வெட்கத்திற்குரிய செயலாக வாழ்வில் நடக்கும் எந்த நிகழ்விற்கும் போதைப் பொருளை நாடுதல் கிட்டத்தட்ட ஒரு பண்பாடகவே மாறியது காலத்தின் கோலமல்ல.நாமாகவே இதை நீட்சியடைய வைத்துவிட்டோம்.
பியர்,சாரயம் இல்லா நிகழ்வு ஒரு அர்த்தமற்ற நிகழ்வாக சமூகத்தில் புரையோடியிருப்பதே வேதனையாகும்.

புரிந்து நடப்போமே.
போதைப் பொருள் பாவனையை அறவே தீண்டாமல் ஒரு புதிய சமூதாயத்தை உருவாக்க இளையோர்கள் நிச்சயம் உழைத்தால் இத் தீய பழக்கத்தை நம் சமுதாயத்திலிருந்து நீக்கலாம்:
செய்வார்கள் செய்யவேண்டும் எனும் ஆதங்கத்துடன்.

நன்றி.






 

வலைப்பதிவு காப்பகம்